2017-10-11 16:28:00

பாசமுள்ள பார்வையில்.... நினைவுகள் இன்னும் தூங்கவில்லை


அவருக்கு அழுகை பீறிட்டது. 'அம்மா எங்கு சென்றுவிட்டார்கள்? அம்மா இருந்திருந்தால் நான் இப்படி அநாதையாகப் படுத்திருக்கமாட்டேனே' என எண்ணி அழுதார். சுற்றி நின்ற உறவினர்களுக்கு, இவர் ஏன் அழுகிறார் என புரியவில்லை. எழவோ, பேசவோ முடியாத நிலையில் படுத்திருந்த அவருக்கு, நினைவில் தொக்கி நின்றதெல்லாம் அவர் தாய்தான். தாய் தன்னைக் கைபிடித்து பள்ளிக்கு அழைத்துச் சென்றது, சோறூட்டியது என எல்லாமே நினைவில் வந்து நிழலாடின. அந்த 25 வயது அம்மா எங்கே போய்விட்டார், என்ன நடந்தது, என எதுவுமே அவருக்கு நினைவில்லை. தாயின் உருவமும், தாயோடு தொடர்புடைய ஒரு சில சம்பவங்களும் தவிர, வேறு எதுவும் அவர் நினைவில் இல்லை. அவரின் அழுகை சிறிது சிறிதாக அடங்கியது. 82 வயதான அந்த முதியவரைச் சுற்றி நின்ற பேரப்பிள்ளைகளையே அவருக்கு அடையாளம் தெரியவில்லை. யார் இந்த இளையோர்? நம்மோடு ஒன்றாகப் பள்ளியில் படித்தவர்களா? என்றுகூட மூளையைக் கசக்கிப் பார்த்தார். தன் தாய் இறந்து 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன என்பதுகூட அவருக்கு நினைவில்லை. ஆனால், அவர் மனம் அவருக்குச் சொன்னதெல்லாம், 'என்னைக் கைபிடித்து அழைத்துச் செல்லும் தாய் இருந்திருந்தால், நான் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கமாட்டேன்' என்பது மட்டும்தான். அதையே திரும்பத் திரும்ப தனக்குள் சொல்லிக் கொண்டிருந்தார். 'அவருக்கு கடந்தகாலம் முழுவதும் மறந்து விட்டது' என மருத்துவர் சொன்னாலும், தாயின் கைபிடித்து நடந்தது, அவர் நினைவிலிருந்து அழிய மறுத்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.