2017-10-11 16:34:00

மரண தண்டனை ஒழிக்கப்படுமாறு தென் கொரியத் திருஅவை, ஐ.நா.


அக்.11,2017. தென் கொரியாவில் மரண தண்டனை வழங்கும் தண்டனையை, சட்டமுறைப்படி ஒழிக்குமாறு, அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளனர், கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர்கள்.

அக்டோபர் 10, இச்செவ்வாயன்று, 15வது மரண தண்டனைக்கு எதிரான உலக நாளை, தென் கொரிய சமயத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும், அரசியல்வாதிகள், அந்நாட்டின் தேசிய அவையில் கடைப்பிடிக்கையில், இவ்வாறு வலியுறுத்தினர், கத்தோலிக்கத் தலைவர்கள்.

தென் கொரியாவில் 1997ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதியிலிருந்து மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லையெனினும், மரண தண்டனை, அந்நாட்டின் குற்றவியல் சட்டத்தில் உள்ளது. மேலும், அந்நாட்டில், 61 பேர் மரண தண்டனை கைதிகளாக சிறையில் உள்ளனர் என, யூக்கா செய்தி கூறுகின்றது.

மேலும், உலகில் 21ம் நூற்றாண்டில், மரண தண்டனைக்கு இடமே இருக்கக் கூடாது என்றும், உலகில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது முற்றிலும் நிறுத்தப்படுமாறும், ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், இச்செவ்வாயன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகில் மரண தண்டனையை செயல்படுத்திவரும் நாடுகள், அதை நிறுத்தியுள்ள 170 நாடுகளுடன் இணையுமாறு, 15வது உலக மரண தண்டனைக்கு எதிரான நாளில் விண்ணப்பித்தார், கூட்டேரெஸ்.

உலகில் இடம்பெறும் மரண தண்டனைகளில் 87 விழுக்காடு, சீனா, ஈரான், சவுதி அரேபியா, ஈராக் ஆகிய நாடுகளில் இடம்பெறுகின்றன.

உலக அளவில், இத்தண்டனைகள், 2015ம் ஆண்டைவிட 2016ம் ஆண்டில் 37 குறைவாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : UCAN/UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.