2017-10-12 16:51:00

ஒழுங்குமுறையற்ற புலம்பெயர்வுகள், முறையான பாதைகள்


அக்.12,2017. சமூக-பொருளாதார சமத்துவமின்மைகள் அதிகரித்துவருவதும், கட்டுப்பாடற்ற உலக தாராளமயமாக்கலுமே, உலகில் இலட்சக்கணக்கில் மக்கள் புலம் பெயர்வதற்கு காரணங்களாக அமைந்துள்ளன என்று, திருப்பீட அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் உரையாற்றினார்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும், பேராயர் இவான் யூர்க்கோவிச் அவர்கள், “ஒழுங்குமுறையற்ற புலம்பெயர்வுகள் மற்றும் முறையான பாதைகள்”  என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில், இவ்வியாழனன்று உரையாற்றுகையில், நூறு கோடி மக்கள் புலம்பெயரும் நிலையில் உள்ளனர் என்பதைக் குறிப்பிட்டார்.

இந்த அமர்வின் தலைப்பையொட்டி சில பரிந்துரைகளை வழங்கவிரும்புவதாக, தன் உரையில் குறிப்பிட்ட பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், ஒழுங்காக நிர்வகிக்கப்பட்ட புலம்பெயர்வுகள், அம்மக்களின் சொந்த நாடுகள், அவர்கள் கடந்து செல்லும் நாடுகள் மற்றும், அவர்கள் குடியேறும் நாடுகளுக்கு உதவுவதாய் அமையும் என்று கூறினார்.

முறையற்று புலம்பெயரும் மக்கள் குறித்த அரசியல் மற்றும், சட்டமுறையான கூறுகளையும் விடுத்து, புலம்பெயர்வின் மனிதமுகத்தை நாம் புறக்கணிக்கக் கூடாது என்றும், தாராளமயமாக்கப்பட்ட உலகில் புலம்பெயரும் குடும்பங்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், பேராயர் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.