2017-10-21 16:13:00

கிறிஸ்துவே, முதல் நற்செய்தி அறிவிப்பாளர்,கர்தினால் பிலோனி


அக்.21,2017. உலகின் அனைத்து பங்குத்தளங்களிலும் இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் 91வது உலக மறைபரப்பு தினத்தை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய, நற்செய்தி அறிவிப்பு பேராயத் தலைவர் கர்தினால் ஃபெர்னான்டோ பிலோனி அவர்கள், கிறிஸ்துவே, முதல் நற்செய்தி அறிவிப்பாளர் என்று சொன்னார்.

இயேசு, திருஅவையின் மறைப்பணி இயல்பைக் கைவிடாமல், தம் சீடர்களால் ஆற்றப்படும் தூதுரைப் பணிகளில் பிரசன்னமாக இருக்கின்றார் என்றும், தூதுரைப் பணிகளை, அருள்பணியாளர்கள் மட்டுமல்ல, திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் ஆற்றுவதற்கு அழைப்புப் பெற்றுள்ளனர் என்றும், கர்தினால் பிலோனி அவர்கள் கூறினார்.

“தூதுரைப் பணி, கிறிஸ்தவ விசுவாசத்தின் மையம்” என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2017ம் ஆண்டின் உலக மறைபரப்பு தினத்திற்கு வெளியிட்ட செய்தியின் முக்கிய கருத்துக்களையும் எடுத்துரைத்தார், கர்தினால் பிலோனி.

உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிப்பதற்கு கிறிஸ்து விடுத்த தூதுரை ஆணையை செயல்படுத்த, நாம் எல்லாரும் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டினார், நற்செய்தி அறிவிப்பு பேராயத் தலைவர் கர்தினால் பிலோனி.

2015ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி நிலவரப்படி, திருஅவையில் ஆயர்களின் எண்ணிக்கை அதிகரித்து, அது 5,304 ஆகவும், அதேநேரம், அருள்பணியாளர்களின்  எண்ணிக்கை குறைந்து, அது 4,15,656 ஆகவும் உள்ளன.

கத்தோலிக்க உலகில், 3,51,797 பொதுநிலை தூதுரைப் பணியாளர்களும், 31,22,653 வேதியர்களும் உள்ளனர் என்று, திருஅவையின் புள்ளி விவர நூலில் சொல்லப்பட்டுள்ளது.

மேலும், கிறிஸ்துவின் ஆணையை ஏற்று, நற்செய்தியின் ஒளியில், தேவையில் இருப்போருக்குப் பணியாற்றுமாறு, மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், 91வது உலக மறைபரப்பு தினத்தையொட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.