2017-10-23 12:49:00

பாசமுள்ள பார்வையில்.. தாயின் கடவுள் பக்தி


தன் குழந்தைகளை வளர்த்து அவர்களை உயர்வடையச் செய்வதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திருந்த அந்த தாய், தன் வாழ்நாளில் தனக்கென்று எதையுமே கேட்டதில்லை. ஆயினும் அவர், வயதுமுதிர்ந்த நிலையில், முதல்முறையாக காசிக்குச் சென்று தன் உடலைவிடும் ஆசையை தெரிவித்தார். தனது தாய் மீது அளவில்லா அன்புகொண்ட மகன், தனது தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு ஏற்பாடுகளைச் செய்தார். தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு, தாயைக் கூட்டிக்கொண்டு பயணத்தை துவக்கினார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அவர்கள் இருவரும், காசிக்கு நடந்தே செல்ல முற்பட்டார்கள். அது ஒரு நீண்ட பயணம். பல வாரங்கள் கடந்த நிலையில் பயணக் களைப்பில், வயது முதிர்ந்த தாய் பலவீனமடைந்தார். அவரால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. ஆகவே, தனது தாயை தோளில் தூக்கிக்கொண்டு நடக்கத் துவங்கினார் மகன். தனது தாயின் ஆசையை, என்ன விலைகொடுத்தாவது பூர்த்திசெய்துவிட வேண்டுமென்ற முனைப்பு இருந்தது மகனுக்கு. அந்த நீண்ட பயணத்தில் ஒரு காட்டு வழியில் பயணிக்க நேர்கையில், அங்கே ஒரு மணியோசையுடன் ஒற்றை மாடு பூட்டப்பட்ட மாட்டுவண்டி வந்து, மகனின் அருகில் நின்றது. “உள்ளே ஏறுங்கள்” என்றார் மாட்டுவண்டி ஓட்டுநர். ஏறிக்கொண்டனர். தனது தாயை வண்டியினுள்ளே பத்திரமாக அமரவைத்தார் மகன். வண்டி நகரத் துவங்கியது. தனது தாயை வண்டியில் கூட்டிச்செல்வது குறித்து மகிழ்ச்சியுற்ற மகன், சிறிது நேரத்திற்குப் பின் ஒரு விடயத்தைக் கவனித்தார். வழக்கமாக மாட்டு வண்டிகளில் செல்லும்போது பாதையில், மேடுபள்ளங்களில் ஏற்படும் அதிர்வுகள் ஏதும் உணரப்படவில்லை என்பதை உணர்ந்தார். வண்டியின் சக்கரத்தைக் கவனித்தபோது அவை சுழலவில்லை. பின் அவர் காளையினைப் பார்த்தார். அது கால்மடக்கி அமர்ந்தவாறு இருந்தது, ஆனாலும் வண்டி சென்றுகொண்டிருந்தது. பின் அவர் ஓட்டுநரைப் பார்த்தார். அங்கு முகமில்லாத ஒரு மேலாடை மட்டுமே இருந்தது. அது, “வெறுமையான முகம்.” அவர் தனது தாயைப் பார்த்தார். அவர் பிரகாசமாய் மின்னிக்கொண்டிருந்தார். அவரது தாய் உடனே எழுந்து உட்கார்ந்து, “நாம் வந்து சேர்ந்துவிட்டோம்! அவர் இங்குதான் இருக்கிறார். நான் போகும் நேரம் வந்துவிட்டது” என்று சொல்லி, தனது உடலை அங்கேயே துறந்தார்(சத்குரு சொன்ன கதை இது).

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.