2017-10-26 15:17:00

கந்தமால் கிறிஸ்தவர்களுக்கு மேலும் இழப்பீட்டுத் தொகை வழங்க..


அக்.26,2017. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை மேலும் வழங்கப்பட வேண்டும் என்று கட்டக்-புவனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள் கேட்டுக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட கந்தமால் கிறிஸ்தவர்கள் சார்பாக, உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டில் மாநில அரசுக்கு விடுத்த கட்டளை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் மனு ஒன்றை, பேராயர் ஜான் பார்வா அவர்கள் தலைமையிலான கிறிஸ்தவத் தலைவர்கள் குழு ஒன்று, மாவட்ட ஆட்சியாளரிடம் சமர்ப்பித்துள்ளது.

இதற்குரிய நிதி, கந்தமால் மாவட்டத்தில் ஏற்கனவே இருக்கின்றபோதிலும், இதுவரை கிறிஸ்தவர்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை என்று, ஆசியச் செய்தியிடம் கூறினார், பேராயர் ஜான் பார்வா.

இன்னும் சிறையிலுள்ள ஏழு அப்பாவி கிறிஸ்தவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று செபிக்குமாறும், விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார், பேராயர் ஜான் பார்வா. கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெற்ற வன்முறையில், பலியான ஒவ்வொருவருக்கும் தலா மூன்று இலட்சம் ரூபாய், கடுமையாய் காயம்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா முப்பதாயிரம் ரூபாய், இலேசாக காயமடைந்த ஒவ்வொருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் என்று, மேலும் இழப்பீட்டு தொகை வழங்கப்பட வேண்டுமென்று, 2016ம் ஆண்டு ஆகஸ்டில், உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.