2017-10-26 14:19:00

பாசமுள்ள பார்வையில்.. பொறுமையைக் கற்றுக் கொடுத்த தாய்


குட்டிக் குரங்கு ஒன்று, மிகவும் கஷ்டப்பட்டு ஒரு தோட்டம் போட்டது. செடிகள் வளர்ந்து மரமாகிப் பூத்துக் குலுங்கி, காய்கனிகள் கொட்டும், ஆசை ஆசையாய் அள்ளிச் சாப்பிடலாம் என்று கணக்குப் போட்டது. என்ன கொடுமை எதுவுமே முளைக்கவில்லை. அதனுடைய ஆசை நிராசையானது. ஆதலால் ஒரு நாள், அந்தக் குட்டிக் குரங்கு தன் தாய்க் குரங்கிடம் சென்று, அம்மா, நான் போட்ட விதைகள் எதுவுமே முளைக்கவில்லை என்று, ஓவென அழுதது. பிள்ளையைச் சமாதானப்படுத்திய தாய்க் குரங்கு, விதை போட்டா தண்ணீர் ஊற்றனும், நீ தண்ணி ஊத்தியிருக்கமாட்டே, நீதான் படு சுட்டியாச்சே என்றது. இல்லையம்மா, ஒரு விதைக்கு எட்டு பாக்கெட் தண்ணீர் என்று, தினமும், காலையிலும் மாலையிலும் ஊற்றுவேன் என்று, தன் தாயின் குற்றச்சாட்டை மறுத்தது குட்டிக் குரங்கு. அடடா.. எட்டு பாக்கெட் தண்ணீர் விட்டால் விதை என்னவாகும்.. அழுகிப்போயிருக்கும்... அதுதான் முளைக்கவில்லை என்றது தாய்க் குரங்கு. மீண்டும் குட்டிக் குரங்கு தாயிடம், அம்மா ஒரு விதைகூட அழுகவில்லை, அது உறுதி என்று உறுமியது. ஆமா, அதெப்படி உனக்குத் தெரியும் என்றது தாய்க் குரங்கு. நான்தான் விதை முளைத்திருக்கிறதா என்று, ஒவ்வொரு நாளும் அதை மண்ணிலிருந்து தோண்டி எடுத்துப் பார்க்கிறேனே என்றது குட்டிக் குரங்கு. அப்படியா கதை, தினம் தினம் விதையை வெளியே எடுத்துப் பார்த்தால் அது எப்படி முளைக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் இருக்கின்றது. அந்தக் காலம் வரை காத்திருக்கவேண்டியது அவரவர் கடமை. அதற்குத் தேவை பொறுமை என்று பாடம் சொல்லியது தாய்க் குரங்கு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.