தன் கீழுள்ள நான்கு தம்பி தங்கைகளும் தரையிலமர்ந்து இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அம்மாவும் பானையிலிருந்து உணவைப் பகிர்ந்து போட்டுக் கொண்டிருந்தார்கள். தரையில் இவனுக்கான தட்டை எடுத்துவைக்கப் போனபோது இவன் சொன்னான், 'அம்மா, எனக்கு வயிறு சரியில்லை. இன்று இரவு மட்டும் தண்ணீர் குடித்துவிட்டு படுத்துப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்' என்று. தாய் சிறிது பதறி விட்டார். ஏம்பா, என்னாச்சு. டீ எதுவும் போட்டுத் தரவா, என்றார். இல்லம்மா, எல்லாம் சரியாகிவிடும். நாளைப் பார்த்துக் கொள்ளலாம், என்று படுக்கப் போய்விட்டான். தரையில் படுத்துக்கொண்டே யோசித்தான் அவன். இவ்வளவு சிரமப்பட்டு கூலி வேலைக்குச் செல்லும் அம்மா, எல்லாரும் சாப்பிட்டபின், தான் சாப்பிடுகிறேன் என ஒவ்வொரு நாளும் சொல்வதன் காரணத்தை நேற்றுதான் தெரிந்து கொண்டான். ஆம், பானையில் இன்னும் இருப்பதுபோல் பாவனை காட்டி அனைவருக்கும் சோறு போட்டுவிட்டு, கடைசியில் வெறும் தண்ணீரைக் குடித்து தூங்கும் அம்மாவை நேற்று அம்மாவுக்குத் தெரியாமலே பார்த்தபோதுதான், உண்மை தெரிந்தது. ‘இன்று பொய் சொல்லி, கொஞ்சம் சோறை அம்மாவுக்கு மிச்சம் பிடித்து விட்டேன். நாளை என்ன பொய் சொல்லி இரவு உணவைத் தவிர்ப்பது’, என சிந்தித்துக் கொண்டிருந்தான் அவன். ஆனால், அவனுக்குத் தெரியாது, இன்றுதான், அவனுடைய 4 உடன் பிறப்புக்களும், வயிறு நிறைய சாப்பிட்டார்கள் என்று.
ஆதாரம்: வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |