2017-10-28 15:18:00

பொதுநிலைச் சபைகள் பிரதிநிதிகளுக்கு திருத்தந்தை செய்தி


அக்.28,2017. “துன்புறும் ஒவ்வொரு மனிதரையும் உங்கள் இதயத்தில் நினைவுகூருங்கள், அதன்பின், உங்கள் செபத்தில் எல்லாரையும் கடவுளிடம் அழைத்து வாருங்கள்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இச்சனிக்கிழமையன்று வெளியாயின.

மேலும், இத்தாலிய பொதுநிலைச் சபைகள் நடத்தும் கூட்டத்தில் கலந்துகொள்கின்ற பிரதிநிதிகளுக்கு இச்சனிக்கிழமையன்று செய்தி அனுப்பியுள்ள  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்கு, உடலிலும், ஆன்மாவிலும் சான்றாக விளங்குமாறு, இச்சபைகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகிற்கு கிறிஸ்துவை அறிவிக்கும் ஆர்வமிக்க பணியில், இறைவார்த்தைக்குச் செவிசாய்ப்பது முக்கியமானது என்றும், வார்த்தைகளில் அல்ல, செயல்களில் மறைப்பணி வெளிப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, இந்த உலகுக்கு கடவுள் யார் என்பதை எடுத்துரைக்க வேண்டியது இன்றியமையாதது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

பொதுநிலைச் சபைகளின் ஆன்மீக வாழ்வுக்கு உதவுகின்ற கூறுகளில், செபித்தல், தேர்ந்து தெளிதல், பகிர்தல், ஊக்கமளித்தல், எளிமையாக இருத்தல் ஆகிய ஐந்து கூறுகள் பற்றி சுருக்கமாகச் சொல்ல விரும்புவதாகத் தெரிவித்து, அவை பற்றியும் விளக்கியுள்ளார் திருத்தந்தை.

அக்டோபர் 28, இச்சனிக்கிழமையன்று ஆரம்பித்த இக்கூட்டம், அக்டோபர் 29, இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.