2017-10-30 16:32:00

ஐரோப்பிய வருங்காலத்திற்கு கிறிஸ்தவ பங்களிப்பு


அக்.30,2017. பல ஆண்டுகளாக கிறிஸ்தவ விசுவாசத்தோடு உருவாக்கப்பட்ட ஐரோப்பியக் கண்டத்தின் வருங்காலத்திற்கு இன்று திருஅவை ஆற்றவேன்டிய பங்களிப்பு என்ன என்பது குறித்து, இச்சனிக்கிழமை மாலை செய்தி ஒன்றை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'ஐரோப்பா குறித்து மீண்டும் சிந்தித்தல், ஐரோப்பாவின் வருங்காலத்திற்கு கிறிஸ்தவ பங்களிப்பு' என்ற தலைப்பில், ஐரோப்பிய சமூகத்தின் ஆயர் பேரவைகளால் ஏற்பாடுச் செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டோருக்கு வழங்கிய உரையில், திறந்த மனப்பான்மை, சுதந்திரம் மற்றும் ஒருவருக்கொருவர் உதவுதல் என்ற அடிப்படையில் இடம்பெற்ற இக்கூட்டம் மிக முக்கியத்துவம் நிறைந்தது என்று கூறியத் திருத்தந்தை, ஆதி காலத்திலிருந்து திருஅவை, மக்களை மையம் கொண்டதாக, மக்களின் இருப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்து வருகின்றது என்றார்.

மக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, அவர்களும் சமூகத்தின் ஓர் அங்கம் என்பதை ஒவ்வொருவரும் உணரும்படிச் செயல்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

ஒரு சமூகத்தில் உள்ள பல்வேறு மக்களின் கொடைகளும், திறமைகளும் அங்கீகரிக்கப்பட்டு, பன்மைத்தன்மையில் ஒன்றிப்பைக் காண்பதன் வழியாக, சமூகத்திற்கு சிறப்புப் பங்கற்றமுடியும் என, மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கலந்துரையாடல், இணைத்தல், ஒருமைப்பாடு, வளர்ச்சி, மற்றும், அமைதியினால் ஒவ்வொரு சமூகமும் கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.