2017-11-07 16:37:00

வத்திக்கானில் அணு ஆயுதக்களைவு குறித்த உலகக்கருத்தரங்கு


நவ.07,2017. உலகில் ஆயுதக்களைவை உருவாக்கும் வாய்ப்புக்கள் குறித்த ஓர் உலகக் கருத்தரங்கு, வருகிற வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் வத்திக்கானின் ஆயர் மன்ற புதிய அரங்கில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'அணு ஆயுதமற்ற உலகம், மற்றும் ஒன்றிணைந்த ஆயுதக்களைவிற்கு வாய்ப்புக்கள்' என்ற தலைப்பில் வத்திக்கானில் இடம்பெறவுள்ள இந்த இரண்டு நாள் கருத்தரங்கை, ஒருங்கிணைந்த மனிதகுல முன்னேற்ற திருப்பீட அவை ஏற்பாடு செய்துள்ளது.

எவ்வித பாகுபாடுமின்றி அனைவரின் வாழ்க்கைத்தரமும் மேம்படுத்தப்படவேண்டும், இயற்கை ஆதாரங்கள் மக்களின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படவேண்டும், அமைதிக்காக உழைக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துவரும் விண்ணப்பங்களுக்கு ஏற்ப, இந்த உலகக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென, ஒருங்கிணைந்த மனிதகுல முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் அறிவித்தார்.

இக்கருத்தரங்கில், நொபெல் விருதுபெற்ற 11 பேர், ஐ.நா. மற்றும் NATO அதிகாரிகள், அரசுப் பிரதிநிதிகள், சமூகத் தலைவர்கள், பல்வேறு மதங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் என, எண்ணற்ற வல்லுனர்கள் கலந்துகொள்வர் என்றும், இக்கருத்தரங்கின் பிரதிநிதிகளை, இவ்வெள்ளியன்று நண்பகலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.