2017-11-10 15:05:00

பாசமுள்ள பார்வையில்...: நானென்ன கைம்மாறு செய்ய முடியும்?


ஆரோக்கியதாஸ் என்ற பெயர் கொண்ட எல்லோரும் ஆரோக்கியமாக இருப்பதில்லை என்பது உண்மைதான். நம் கதையில் வரும் ஆரோக்கியதாசும் 4 வயது வரை நன்றாகத்தான் இருந்தார். அதன்பின்தான், போலியோவால் தாக்கப்பட்டு கால்களின் செயல்பாட்டை இழந்தார். கடந்த 45 ஆண்டுகளுக்கு மேல், அவர் தாய்தான் ஆரோக்கிதாசை நன்றாகக் கவனித்து பராமரித்து வந்தார். திடீரென்று ஒரு நாள் இரவு அவருக்கு வியர்த்துக் கொட்ட, நெஞ்சு வலி அதிகரித்தது. அம்மா, என அலறியவரை பக்கத்து வீட்டாரின் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தார் தாய். உடனேயே அவரின் இரத்தக்குழாய் அடைப்பை நீக்கும் அறுவைச்சிகிச்சைக்கு, 6 இலட்சம் ரூபாயைக் கட்டச் சொன்னார்கள். மலைப்பாக இருந்தது, ஆரோக்கியதாசுக்கு. இரண்டு அடைப்பை நீக்க, அதுவும் 3 மணி நேரம் கூட நடக்காத சிகிச்சைக்கு 6 இலட்சம் என்றால், இத்தனை ஆண்டுகள் தன் அருகே இருந்து தன்னை பொன்போல் காப்பாற்றி வரும் தன் தாய்க்கு என்ன கொடுத்து ஈடு செய்ய முடியும் என எண்ணினார் ஆரோக்கியதாஸ். தாயன்பு எதையும் எதிர்பார்ப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால், தன் தாய்க்கு தன்னால் என்ன கைம்மாறு செய்ய முடியும் என திணறினார். அன்றுதான், முதன்முதலாக, தன் தாயின் நலனுக்காக, இறைவனிடம் செபிக்கத் துவங்கினார், ஆரோக்கியதாஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.