2017-11-18 15:10:00

திருப்பீட கலாச்சார அவை கூட்டத்தினருக்கு திருத்தந்தை உரை


நவ.18,2017. நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக, ஏற்கனவே மாறியுள்ள அனைத்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மனிதம் என்றால் என்ன? தொழில்நுட்பக் கருவிகளிலிருந்து மனிதரை வேறுபடுத்துவது எது? ஆகியவை பற்றி நம்மைச் சிந்திக்க வைக்கின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இச்சனிக்கிழமையன்று கூறினார்.

திருப்பீட கலாச்சார அவை நடத்திய ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில் கலந்துகொண்ட ஏறக்குறைய 83 பிரிதிநிதிகளை, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, “மனித சமுதாயத்தின் வருங்காலம் : மானுடவியலுக்கு புதிய சவால்கள்” என்ற, இக்கூட்டத்தின் தலைப்பையொட்டி தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இக்காலத்தின் நம்புதற்கரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மனித வரலாற்றில், ஒரு புதிய சகாப்தத்தையும், புதிய வரலாற்றையும் ஏற்படுத்தியுள்ளன போன்ற ஓர் உணர்வை சிலரில் ஏற்படுத்தியுள்ளது என்றுரைத்த திருத்தந்தை, இந்த முன்னேற்றங்களால் நாம் எதிர்கொள்ளும் கடும் அச்சங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு, திருஅவை பதில் சொல்கின்றது என்றும் கூறினார்.

இக்கால மனிதரின் மகிழ்வுகள், நம்பிக்கைகள் மற்றும் பயங்கள் பற்றி அறிந்துள்ள திருஅவை, எல்லாவற்றிலும் மனிதர் மையப்படுத்தப்பட வேண்டுமென விரும்புகின்றது என்றும், முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் அவர்கள் கூறியிருப்பது போன்று, உண்மையான முன்னேற்றம், மனிதரை மற்றும் எல்லா மனிதரின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவதைப் பொருத்து அமைந்துள்ளது என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மனித சமுதாயத்தின் நலன்கருதி, ஏனைய மனிதச் செயல்பாடுகளைப் போலவே, சில வரையறைகளை மதிக்கவேண்டியுள்ளது என்பதையும், அதற்கு நன்னெறி சார்ந்த கடமை உள்ளது என்பதையும், அறிவியல் அறிந்துள்ளது என்றும் திருத்தந்தை கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.