2017-11-25 14:11:00

பாசமுள்ள பார்வையில் - அரியணையில் அமரவைத்த அன்பு


குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த அயர்லாந்து நாட்டு அரசர் ஒருவர், தனக்குப் பின் அரியணையில் ஏறும் தகுதியுடைய வாரிசு ஒருவரைத் தேடுவதாக நாட்டு மக்களுக்கு அறிவித்தார். வாரிசாக விரும்புகிறவர்கள், ஒரு குறிப்பிட்ட நாளன்று, அரண்மனைக்கு வரவேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டார். தனது வாரிசாக விரும்புகிறவர், கடவுள் மீதும், அயலவர் மீதும், ஆழ்ந்த அன்பு கொண்டவராக இருக்கவேண்டும் என்பது மட்டுமே, அரசர் விதித்திருந்த நிபந்தனை. அரசரின் அறிக்கையைக் கேட்ட பல இளையோர், மிக்க மகிழ்ச்சியோடு அரண்மனையை நோக்கிப் படையெடுத்தனர்.

அந்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருந்த ஒரு சிற்றூரில், ஏழ்மையில் வாழ்ந்து வந்த ஓர் இளைஞன், கடவுள் பக்தி மிக்கவர், அயலவர் மீதும் அதிக அன்பு கொண்டவர். ஊர் மக்கள் அனைவரும், அந்த இளைஞனை, அரசரின் வாரிசாகும்படி தூண்டினர். ஊர்மக்களிடையே நிதி திரட்டி, அந்த இளைஞன் உடுத்திக்கொள்ள ஓர் அழகான மேலாடையை அவருக்குப் பரிசளித்தனர். அரண்மனைக்குச் செல்லும் நாள் வந்ததும், பயணத்திற்குத் தேவையான உணவையும் தந்து, அவரை வழியனுப்பி வைத்தனர்.

இளைஞன் அரண்மனையை நெருங்கியபோது, பனி பெய்துகொண்டிருந்தது. அரண்மனைக்கு அருகில், வழியோரத்தில், கொட்டும் பனியில், ஒருவர், கிழிந்த ஆடைகளுடன், குளிரில் நடுங்கியவாறு, பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். இளைஞன், உடனே, தான் அணிந்திருந்த அந்த அழகிய மேலாடையை அவருக்கு அணிவித்தார். தன்னிடம் எஞ்சியிருந்த உணவையும் அவருக்குக் கொடுத்தார்.

அரண்மனைக்குள் நுழைந்ததும், அங்கு காத்திருந்த ஆயிரக்கணக்கான இளையோரில் ஒருவராக, ஓர் ஓரத்தில் இவர் அமர்ந்தார். அப்போது அரசர் அவைக்குள் நுழைந்தார். அரசரைக் கண்ட இளைஞனுக்கு அதிர்ச்சி. வழியில், அந்தப் பிச்சைக்காரருக்கு, தான் கொடுத்திருந்த மேலாடையை அரசர் அணிந்திருந்தார். அரசர், நேராக இளைஞனிடம் சென்று, அவரை, தன்னுடன் அழைத்துச்சென்றார். தன் அரியணையில் அமரவைத்து, "இவரே என் வாரிசு" என்று அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.