2017-12-04 16:36:00

தன் திருத்தூதுப் பயண நிறைவுக்கு அன்னை மரியாவுக்கு நன்றி


டிச.,04,2017. மியான்மார் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் ஒரு வார பயணத்தை நிறைவு செய்து கடந்த சனிக்கிழமையன்று இரவு உரோம் நகர் வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிறு காலையில், உரோம் நகர் புனித மேரி மேஜர் பேராலயம் சென்று, தன் திருப்பயண வெற்றிக்காக, அன்னை மரியாவுக்கு நன்றி தெரிவித்தார்.

ஞாயிறு காலையில், புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயம் சென்று, அன்னை மரியா திருவுருவத்தின் காலடியில் வெள்ளை மலர்களை அர்ப்பணித்து, தன் திருத்தூதுப் பயண வெற்றிக்காக சிறிது நேரம் செபிக்கவும் செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு வெளிநாட்டு திருத்தூதுப் பயணத்தின் துவக்கத்திலும், இறுதியிலும், இப்பேராலயம் சென்று செபிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், பங்களாதேஷில் தன் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து, உரோம் நோக்கி பயணம் செய்த வழியில், தான் கடந்து வந்த பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான், அசர்பெய்ஜான், ஜியார்ஜியா, துருக்கி, பல்கேரியா, செர்பியா, போஸ்னியா, எர்சகொவினா, குரோவேஷியா, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு தனித்தனி வாழ்த்துச் செய்திகளையும் விமானத்திலிருந்தே அனுப்பினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.