டிச.,04,2017. நம்முடைய பாவங்களிலும், நேர்மையற்ற நிலைகளிலும் நம்மை இழந்துவிடாமல், நம் வாழ்வில் இறைவன் நுழைய அனுமதிக்கவேண்டும் என, திருவருகைக்கால முதல் ஞாயிறன்று, மூவேளை செப உரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று நம்மைச் சந்திக்கவரும் கிறிஸ்துவுக்காக நம்மைத் தயாரிக்கும் இந்த திருவருகைக்காலம் குறித்தும், இறுதி நாளில் நம்மைத் தீர்ப்பிட வரவிருக்கும் இறைவன் குறித்தும் தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் எப்போதெல்லாம் இயேசுவை ஏற்றுக்கோள்ள விருப்பத்தை வெளியிடுகிறோமோ, அப்போதெல்லாம், அவர் நம்மிடம் வருகிறார் என தெரிவித்தார்.
எப்போதும் விழிப்பாயிருக்கும்படி அழைப்பு விடுக்கும் இறைவன், மேலோட்டமான வாழ்வை மேற்கொள்ளாமல், மற்றவர்கள் மீது அக்கறையுடன் கூடிய வாழ்வை நாம் வாழ வேண்டுமென எதிர்பார்க்கிறார் எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மற்றவர்களின் கண்ணீர் மற்றும் தேவைகள் குறித்து உணர்ந்தவர்களாக, ஏழைகளின் துயர்களைப் புரிந்து ஏற்றுக்கொள்ளும் மனநிலையை நாம் பெறவேண்டும் எனவும் விண்ணப்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
தன் அண்மை திருப்பயணத்தில் தங்கள் செபம் வழியாக உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, ஹொண்டூராஸ் மக்களின் தற்போதைய பதட்ட நிலைகள் அகல செபிக்குமாறும் அழைப்பு விடுத்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |