2017-12-06 14:35:00

எருசலேம் பிரச்சனைகள் கவலையளிக்கின்றன - திருத்தந்தை


டிச.06,2017. யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் அனைவருக்கும் புனிதமாக விளங்கும் எருசலேம் நகரில் பிரச்சனைகளை உருவாக்கும் மாற்றங்களைக் கொணர்வது தனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

டிசம்பர் 6, இப்புதனன்று, தன் மறைக்கல்வி உரையை வழங்கியபின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எருசலேம் நகரை மையப்படுத்தி, அண்மைய நாட்களில் உருவாகியுள்ள பிரச்சனைகள் தனக்கு கவலை அளிப்பதாகவும், ஐக்கிய நாடுகள் அவை பரிந்துரைத்திருக்கும் கொள்கைகளின்படி, அந்நகரை, பொதுவான ஒரு நகரமாக விட்டுவிடுவதே, அனைவருக்கும் நன்மை பயக்கும் என்றும் கூறினார்.

எருசலேம் நகரில் மாற்றங்களைக் கொணர விழைவோருக்கு இறைவன் நல்ல அறிவொளியையும், நுண்மதியையும் தருவதற்கு தான் இறைவனிடம் செபிப்பதாகவும், அந்நகரின் புனிதம் காக்கப்படுவது, மத்தியக் கிழக்குப் பகுதி, புனித பூமி மற்றும் உலகம் அனைத்திற்கும் நன்மை பயக்கும் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

தேவையற்ற பல கொடுமையான மோதல்களில் துன்புறும் இவ்வுலகில் இன்னும் கூடுதலான பிரச்சனைகளையும், நெருக்கடிகளையும் உருவாக்குவதை அனைவரும் தவிர்க்கவேண்டும் என்று, தன் புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறப்பான விண்ணப்பத்தை முன்வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.