2017-12-07 16:02:00

கர்தினால் சொதானோவின் 90வது பிறந்தநாள் திருப்பலி- திருத்தந்தை


டிச.07,2017. வாழ்வின் ஒவ்வொரு மைல்கல்லையும் தாண்டும்போது, கடந்துவந்த பாதையின் நினைவுகள், நம்மை இன்னும் உறுதியாக்குகின்றன என்றும், இந்த நினைவுகள், நம் வாழ்வை ஒரு கொடையாக வழங்க அழைக்கின்றன என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இன்று நிறைவேற்றிய ஒரு சிறப்புத் திருப்பலியின் இறுதியில் கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவையின் கர்தினால்கள் குழுவின் தலைவராகப் பணியாற்றும் கர்தினால் ஆஞ்செலோ சொதானோ அவர்களின் 90வது பிறந்தநாளையொட்டி, வத்திக்கான் புனித பவுல் சிற்றாலயத்தில், இவ்வியாழன் காலை நடைபெற்ற சிறப்புத் திருப்பலியை தலைமையேற்று நடத்தியத் திருத்தந்தை, இத்திருப்பலியின் இறுதியில் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட வேளையில் இவ்வாறு கூறினார்.

திருஅவையின் பல்வேறு பொறுப்புக்களில் பணியாற்றிய கர்தினால் சொதானோ அவர்கள், மகிழ்வோடும், கண்ணீரோடும் பல சூழல்களைக் கடந்து வந்துள்ளார் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

1927ம் ஆண்டு, நவம்பர் 23ம் தேதி பிறந்த கர்தினால் சொதானோ அவர்கள், 1991ம் ஆண்டு முதல், 2006ம் ஆண்டு முடிய, 2ம் ஜான்பால், மற்றும், 16ம் பெனடிக்ட் ஆகிய இரு திருத்தந்தையரின் பணிக்காலத்தில் திருப்பீடச் செயலராகப் பணியாற்றியவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.