2017-12-09 15:30:00

வத்திக்கான் நிதி சார்ந்த அறிக்கைக்கு MONEYVAL வரவேற்பு


டிச.09,2017. பணத்தைக் கையாள்வது குறித்த, திருப்பீடம் மற்றும் வத்திக்கான் நாட்டின் நடவடிக்கைகளில் காணப்படும் முன்னேற்றத்தை வரவேற்றுள்ளது, MONEYVAL எனப்படும் ஐரோப்பிய நிதி கண்காணிப்பு நிலைத்த குழு.

MONEYVAL குழுவின் வல்லுனர்களுடன் இவ்வாரத்தில் நடந்த ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில், திருப்பீடம் மற்றும் வத்திக்கான் நாடு சமர்ப்பித்த, மூன்றாவது அறிக்கையை, MONEYVAL குழு ஏற்றுக்கொண்டுள்ளதோடு, இந்நடவடிக்கையில் முன்னேற்றம் காணப்படுவதையும் பாராட்டியுள்ளது என்று, திருப்பீட செய்தி தொடர்பகம் கூறியுள்ளது. மேலும், நிதி சார்ந்த குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், அக்குற்றங்களைத் தடுக்கவும், மேலும் உறுதியுடன் செயல்படத் தீர்மானித்திருப்பதாக, இக்கூட்டத்தில் திருப்பீடம் தெரிவித்தது என்றும், அச்செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

2012ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி, MONEYVAL குழுவும், வத்திக்கானும் இணைந்து, நிதி கையாளப்படும்முறை குறித்து மதிப்பீடு செய்தன. அதற்குப் பின்னர், 2013ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி முதல் அறிக்கையையும், 2015ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி இரண்டாவது அறிக்கையையும், திருப்பீடமும், வத்திக்கான் நாடும் சமர்ப்பித்தன. இந்த அறிக்கைகள், MONEYVAL குழுவின் சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் முறைகளில் அமைந்திருந்தன.

பணம் பரிமாறப்படும் முறைகள், பயங்கரவாதத்திற்கு வழங்கப்படும் நிதி போன்ற நடவடிக்கைகளில், நாடுகளின் அதிகாரிகள் செயல்படுவதைக் கண்காணித்து வருகின்றது, ஐரோப்பிய MONEYVAL  குழு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.