2017-12-12 16:42:00

Populorum progressio அமைப்பின் 25வது ஆண்டு நிறைவு


டிச.12,2017. 'Populorum progressio' அதாவது மக்களின் முன்னேற்றம் எனப்படும் இலத்தீன் அமெரிக்காவுக்கென அமைப்பு உருவாக்கப்பட்டதன் 25வது ஆண்டையொட்டி, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்திற்கு இந்த அமைப்பு ஆற்றியுள்ள பணிகள் பற்றி, இச்செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் விளக்கினார், திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன்.

இலத்தீன் அமெரிக்காவில் பூர்வீக இன மற்றும் அமேசான் பகுதி மக்களுக்கு, வருகின்ற  ஆண்டுகளில் ஆற்றவுள்ள பணிகள் பற்றி, செய்தியாளர் கூட்டத்தில், கர்தினால் டர்க்சன் அவர்களும், உலக ஆயர்கள் மாமன்றச் செயலர் கர்தினால் லொரென்சோ பால்திச்சேரி அவர்களும் விளக்கினர்.

'Populorum progressio' அமைப்பின் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உரோம் நகரில் மூன்று நாள் கூட்டம் ஒன்றும் நடைபெற்று வருகிறது. இக்கூட்டம், டிசம்பர் 13, இப்புதனன்று நிறைவடையும். இதில் பொதுநிலை வல்லுனர்களும், முக்கிய திருஅவை அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.  

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் விண்ணப்பத்தின்பேரில், 1992ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி உருவாக்கப்பட்ட 'Populorum progressio' அமைப்பு, திருப்பீட கோர் ஊனும் பிறரன்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கோர் ஊனும் பிறரன்பு நிறுவனம், தற்போது திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையின் ஓர் அங்கமாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் இந்த அமைப்பு, 4,300க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு, 4 கோடியே 10 இலட்சம் டாலர்களுக்கு மேல் செலவிட்டுள்ளது. வேளாண்மை, கல்வி, நலவாழ்வு போன்றவைகளுக்கு இந்த அமைப்பு உதவியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.