2017-12-13 16:22:00

உலக வளங்கள் சமமான முறையில் கிடைப்பதில்லை


டிச.13,2017. உலகெங்கும் பன்னாட்டு வர்த்தகம் வளர்ந்துள்ளதன் விளைவாக, உலகின் வறுமை குறைந்துள்ளது என்றாலும், இந்த முன்னேற்றத்தின் பலன்கள் அனைவரையும் சமமாகச் சென்றடையவில்லை என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு கருத்தரங்கில் கூறினார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. அவை கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பில், நிரந்தரப் பார்வையாளராகப் பங்கேற்கும் பேராயர் ஈவான் யூர்கோவிச் அவர்கள், உலக வர்த்தக நிறுவனம் (WTO), புவனஸ் அயிரஸ் நகரில் ஏற்பாடு செய்திருந்த பன்னாட்டு கருத்தரங்கில், இச்செவ்வாயன்று உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.

உலக வளங்கள் அனைவருக்கும் சமமான முறையில் கிடைப்பதில்லை என்பதை உலக அரசுகள் 2015ம் ஆண்டு உணர்ந்தபோதிலும், சமமான பங்கீடு குறித்த முடிவுகளைச் செயல்படுத்தப்படுவதில், உலக அரசுகள் மெதுவாகவே செயல்படுகின்றன என்று, பேராயர் யூர்கோவிச் அவர்கள் எடுத்துரைத்தார்.

தனியார் வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கு, தீவிர முயற்சிகள் வளர்ந்துள்ளதால், உலகின் ஒரு சில சமுதாயங்கள், மேலும், மேலும் புறக்கணிக்கப்படும் ஆபத்தும் வளர்ந்துள்ளது என்று பேராயர் யூர்கோவிச் அவர்கள், எச்சரிக்கை விடுத்தார்.

உலக சமுதாய முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து, உலக அரசுகள், முடிவெடுக்கும் செயல்பாடுகளில் பெண்களுக்கு அதிக வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் என்று பேராயர் யூர்கோவிச் அவர்கள் உலக வர்த்தக நிறுவனத்தின் கூட்டத்தில் விண்ணப்பித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.