2017-12-15 14:46:00

திருப்பீடத்தின் கருத்துக்களை ஐ.நா.வில் எடுத்துரைப்பதற்கு...


டிச.15,2017. மனித சமுதாயத்தை நேரடியாகப் பாதிக்கின்ற விவகாரங்கள் மற்றும் கொள்கைகள் குறித்த திருப்பீடத்தின் நிலைப்பாட்டை, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் வெளிப்படுத்துவதற்கு கடினமாய் உழைத்துவரும், திருப்பீட பிரதிநிதி ஒருவருக்கு, திருத்தந்தை நன்றி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. தலைமையகத்தில், திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், வத்திக்கானுக்கு வந்திருந்தபோது, அவரைச் சந்தித்துப் பேசிய திருத்தந்தை, தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

திருத்தந்தையைச் சந்தித்தது குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, பேராயர் அவுசா அவர்கள், தனது பணியை எளிதாகச் செய்வதற்கு உதவி வருவதற்கு, திருத்தந்தைக்கு, தான் நன்றி தெரிவித்ததாகவும் கூறினார்.

அணு ஆயுதங்கள் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதோடு, அணு ஆயுதங்கள் குறித்த புதிய ஒப்பந்தத்தைச் செயல்படுத்தியதற்கும், இந்தப் புதிய ஒப்பந்தம் கொண்டுவரப்படுவதற்கு, திருத்தந்தை முக்கிய பங்காற்றியதற்கும், தான் நன்றி கூறியதாகவும் பேராயர் அவுசா அவர்கள், தெரிவித்தார்.

பல முக்கிய விவகாரங்களில் கலந்துரையாடல் நடத்துவதற்கு 2017ம் ஆண்டு கடினமான ஆண்டாக இருந்ததெனவும் கூறிய பேராயர் அவுசா அவர்கள், புலம்பெயர்வோர் குறித்து திருத்தந்தை எடுத்துவரும் நடவடிக்கைகளையும் பாராட்டியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.