2017-12-16 16:41:00

நடுநிலைச் செய்திகள், சமூக வளர்ச்சிக்கு உதவுகின்றன


டிச.16,2017. இன்றைய உலகின் முக்கியப் பணிகளுள் ஒன்றான, தகவல் பரிமாற்றத் துறையில் பணிபுரிவோர், தகவல்களை சரியான முறையில் வழங்கும் கடமையைக் கொண்டுள்ளனர் என, சனிக்கிழமை காலை தன்னை சந்தித்த சமூகத்தொடர்பாளர்களிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய இதழ்களின் கூட்டமைப்பு, மற்றும், இத்தாலிய கத்தோலிக்க வார இதழ்களின் கூட்டமைப்பு என்ற இரு அமைப்புக்களின் அங்கத்தினர்களை, திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, எந்த ஒரு நிகழ்வையும் நடுநிலையோடு, உள்ளதை உள்ளவாறு எடுத்துரைப்பது, சமூக வளர்ச்சிக்கு, குறிப்பாக, ஜனநாயகத்திற்கு இன்றியமையாதது என வலியுறுத்தினார்.

வேகமாகச் சென்றுக் கொண்டிருக்கும் இன்றைய உலகில், நம்பத்தகும் தகவல்களின் தேவை குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, எந்த ஒரு செய்தியும் மக்களின் உணர்வுகளை தூண்டாதவைகளாக இருப்பதுடன், அவர்களுள் கேள்விகளை எழுப்பி, நல்லதொரு, நியாயமான முடிவை எடுக்க உதவுவதாக இருக்கவேண்டும் என்றார்.

சமூக நிகழ்வுகளை நற்செய்தியின் ஒளியில் வாசிக்க, கத்தோலிக்கர்களுக்கு, கத்தோலிக்க இதழ்கள் உதவுவதன் வழியாக, நற்செய்தி அறிவிப்பில், அவ்வமைப்புகள் சிறப்புப் பங்காற்ற முடியும் எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.