2017-12-18 15:22:00

புனித யோசேப்பிடமிருந்து கற்றுக்கொள்வோம்


டிச.18,2017. நம் துன்பகரமான வேளைகளிலும், இருள் சூழ்ந்துள்ள நேரங்களிலும், பிரச்னைகளிலும் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து புனித யோசேப்பிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம், ஏனெனில், இருளில் நடப்பதையும், இறைவனுக்குச் செவிமடுப்பதையும், அமைதி காப்பதையும் அறிந்தவர் அவர், என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திங்கள் காலை, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, அன்னைமரியா கருவுற்றிருந்ததை அறிந்த புனித யோசேப்பு அவர்கள், அன்னை மரியாவை குற்றஞ்சாட்டாமல், அமைதியாக வாழ்ந்ததுடன், அன்னைமரியாயையும் அமைதியில் வாழ அனுமதித்தார் என்றார்.

குழந்தை பிறப்பு குறித்து வானதூதரால் தனக்கு கனவில் கூறப்பட்டவைகளை அவர் நம்பி, கீழ்ப்படிந்து, தந்தைக்குரிய நிலையையும், இயேசு குறித்த மறையுண்மைகளையும் ஏற்றுக்கொண்டார் என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித யோசேப்பு, ஒரு வார்த்தை கூட பேசியதாக விவிலியம் கூறவில்லை என்பதிலிருந்தே, அவர், அமைதியில், கீழ்ப்படிபவராக வாழ்ந்தார் என்பது புலனாகிறது என்றார்.

இறைத் தந்தையின் நிழலாக இருந்து, இறைமகனை வளர்த்துத் தந்தவர் புனித யோசேப்பு எனவும், தன் மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.