2017-12-20 16:04:00

எருசலேமை அமைதி நகராகக் காண விரும்பும் கர்தினால் நிக்கோல்ஸ்


டிச.20,2017. புனித நகரான எருசலேம் மீது அன்பு கொண்டுள்ள அனைவரும், அதனை, அமைதியின் நகரமாகக் காண்பதற்கு விரும்புகின்றனர் என்று, இங்கிலாந்து கர்தினால், வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் எருசலேம் நகரில் பணியாற்றும் கிறிஸ்தவ தலைவர்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

எருசலேம் நகரை, இஸ்ரேல் நாட்டின் தலைநகர் என்று அமெரிக்க அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள் அங்கீகரித்துள்ளதைத் தொடர்ந்து, எருசலேமிலுள்ள கத்தோலிக்க ஆர்த்தடாக்ஸ் தலைவர்கள், அரசுத்தலைவர் டிரம்ப் அவர்களுக்கு, தங்கள் எதிர்ப்பையும், கவலைகளையும் தெரிவித்து மடல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இம்மடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தையும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் பணியாற்றும் ஆயர்கள் ஆமோதிப்பதாக, கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் அவர்களின் முடிவை, தாங்கள் ஏற்க மறுப்பதாகவும், ஐ.நா.அவை இதுவரை கடைபிடித்துவந்துள்ள முடிவுகளை, தாங்கள் ஆதரிப்பதாகவும், கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

ஆபத்தை விளைவிக்கும் டிரம்ப் அவர்களின் முடிவை எதிர்ப்பதற்கு, அனைத்துலக கிறிஸ்தவத் தலைவர்கள் குரல் எழுப்பவேண்டும் என்றும், கர்தினால் நிக்கோல்ஸ் அவர்களின் மடல் விண்ணப்பித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.