2017-12-21 16:09:00

குழந்தைகளின் ஓவியக் கண்காட்சியில் கர்தினால் பரோலின்


டிச.21,2017. உலகின் ஐந்து கண்டங்களிலிருந்தும் தங்கள் ஓவியங்களைத் திருத்தந்தைக்கு வழங்கியுள்ள குழந்தைகளின் படைப்புக்கள், குழந்தைகளின் கண்ணோட்டத்தில் இவ்வுலகைக் காண்பதற்கு நமக்குச் சொல்லித் தருகின்றன என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கூறினார்.

உலகின் பல்வேறு நாடுகளின் குழந்தைகள் உருவாக்கி, திருத்தந்தைக்கு அனுப்பி வைத்திருந்த ஓவியங்கள், "அன்பு திருத்தந்தையே, உங்களுக்கு என் ஓவியத்தை பரிசளிக்கிறேன்" என்ற தலைப்பில், ஒரு கண்காட்சியாக, உரோம் நகரின் பாலிதோரோ (Palidoro) மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சியை திறந்து வைத்த கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தைக்கு குழந்தைகள் வழங்கிய ஓவியங்கள், தற்போது பல குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு பயன்படுவது மிகச் சிறந்த ஒரு முயற்சி என்று கூறினார்.

உரோம் நகரில், இயங்கிவரும் குழந்தை இயேசு மருத்துவமனையும், இயேசு சபையினரால் நடத்தப்படும் “La Civiltà Cattolica” இதழும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சியில் விற்பனையாகும் ஓவியங்கள், நோயுற்ற பல குழந்தைகளின் மருத்துவ செலவுக்குப் பயன்படுத்தப்படும் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.