2017-12-21 16:16:00

நல்லவற்றை செய்வதற்கு மேற்கொள்ளப்படும் தேடலே, அரசியல்


டிச.21,2017. மக்களின் பொது நலனுக்கு, குறிப்பாக, சமுதாயத்தில் வலுவிழந்தோர், புறக்கணிக்கப்பட்டோர் நலனுக்கு நல்லவற்றை செய்வதற்கு மேற்கொள்ளப்படும் தேடலே, அரசியல் என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கூறினார்.

இத்தாலிய அரசில் பணியாற்றும் கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் டிசம்பர் 20, இப்புதனன்று, கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடியதை முன்னிட்டு, திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் பரோலின்  அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

உண்மையான அதிகாரம் பணியில் அடங்கியுள்ளது, மக்களின் பிரச்சனைகளிலிருந்து விலகி இருப்பது அரசியல் அல்ல, தன்னலத்தையும், பிரிவினைகளையும் வளர்ப்பது அரசியல் அல்ல, நம் மத நம்பிக்கை அரசியலுக்கு வழிகாட்டியாக இருக்கிறது என்ற கருத்துக்களில் கர்தினால் பரோலின் அவர்கள் தன் மறையுரையைப் பகிர்ந்துகொண்டார்.

மனித மாண்பை வளர்ப்பதே அனைத்து சமுதாயத் துறைகளின் முக்கியப்பணி என்பதைக் கூறவே, இயேசு மனிதராகத் தோன்றினார் என்று, கர்தினால் பரோலின் அவர்கள் தன் மறையுரையின் இறுதியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.