2017-12-23 14:52:00

உலகின் மிகச் சிறிய குடில் திருத்தந்தைக்கு பரிசு


டிச.23,2017. லித்துவேனிய நாட்டின் அரசுத்தலைவர் Dalia Grybauskaitė அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, மைக்ரோஸ்கோப்பின் உதவியுடன் பார்க்கக் கூடிய, உலகின் மிகச் சிறிய குடில் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார்.

லித்துவேனிய நாட்டின் வில்னியுஸ் பேராலய வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள குடில் அமைப்பை, பத்தாயிரம் முறைகள் சுருக்கி, இந்தச் சிறிய குடில் அமைக்கப்பட்டுள்ளது.

இச்சிறிய குடில், மைக்ரோஸ்கோப்பின் உதவியுடன் பார்க்க முடியும் என்றும், இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என்றும், அந்நாட்டு அறிவியலாளரும், மாணவர்களும் மூன்று மாதங்களாக இக்குடிலை அமைத்தனர் என்றும், அரசுத்தலைவர் Grybauskaitė அவர்கள் கூறியுள்ளார்.
“LinkMenų fabrikas” ஆய்வு மையத்தால் உருவாக்கப்பட்டுள்ள இத்தகைய மூன்று சிறிய குடில்களில் ஒன்று, டிசம்பர் 22, இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் வழங்கப்பட்டது. 

அரசுத்தலைவர் Dalia Grybauskaitė அவர்கள், லித்துவேனிய நாட்டின் முதல் பெண் அரசுத்தலைவராவார்.

லித்துவேனியா, எஸ்டோனியா, லாத்வியா ஆகிய மூன்று பால்டிக் நாடுகளுக்கு, வருகிற ஆண்டில் திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.