2017-12-23 14:44:00

கிறிஸ்மஸ் கால இடைக்காலப் போர் நிறுத்தத்திற்கு வரவேற்பு


டிச.23,2017. பிலிப்பீன்ஸ் நாட்டில், கம்யூனிச புரட்சியாளர்கள் கிறிஸ்மஸ் கால இடைக்காலப் போர் நிறுத்தத்தை அறிவித்திருப்பதை வரவேற்றுள்ளது தலத்திருஅவை.

கம்யூனிசவாதிகளின் தலைமையில் செயல்படும் புதிய மக்களின் புரட்சிப்படை, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு அறிவித்துள்ள போர் நிறுத்தம், அமைதிக்கான கலந்துரையாடல்கள் தொடருவதற்கு வழியமைக்க வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பையும் தெரிவித்துள்ளது, பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கத் திருஅவை.

இந்த இடைக்காலப் போர் நிறுத்தம், டிசம்பர் 23ம் தேதி முதல், 26ம் தேதி வரையும், டிசம்பர் 30ம் தேதி முதல், 2018ம் ஆண்டு சனவரி 2ம் தேதி வரையும் அமலில் இருக்கும் என்று, அப்புரட்சிப் படையின் பேச்சாளர் ஓரிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இதற்கிடையே, பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் ரொட்ரிகோ துத்தர்த்தே அவர்களும், டிசம்பர் 24ம் தேதி முதல், சனவரி 2ம் தேதி வரை, இடைக்காலப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.