2017-12-27 15:09:00

இந்திய அரசின் மீது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை குறைந்துள்ளது


டிச.27,2017. கிறிஸ்மஸ் கால கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வண்ணம் நடைபெற்றுவரும் வன்முறைகளைத் தொடர்ந்து, மத்திய அரசின் மீது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை குறைந்துள்ளது என்று, இந்திய ஆயர் பேரவைத்தலைவர், கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில், தெருக்களில், கிறிஸ்மஸ் பாடல்களை இசைத்துவந்த பாடல் குழுவினர், அருள்பணியாளர்கள், குருத்துவ பயிற்சி பெறும் மாணவர்கள் ஆகியோர் மீது, இந்து அடிப்படைவாதக் குழுவொன்று மேற்கொண்ட தாக்குதலையடுத்து, பாதிக்கப்பபட்டவர்களைச் சந்தித்து திரும்பிய கர்தினால் கிளீமிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

நடைபெற்ற தாக்குதலில், காவல்துறையினர், தாக்கியவர்களை விட்டுவிட்டு, தாக்கப்பட்டவர்களை காவலில் வைத்திருந்ததும், அவர்களது வாகனம் காவல் நிலையத்திற்கு முன் எரிக்கப்பட்டதும் அடிப்படைவாதிகளுக்கு அளிக்கப்படும் மறைமுகமான ஆதரவை வெளிப்படுத்துகிறது என்று, கர்தினால் கிளீமிஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

கல்வி கூடங்கள், மருத்துவ நிலையங்கள் வழியே கிறிஸ்தவர்கள் ஆற்றிவரும் ஒப்பற்ற சேவைகளை, மதம் மாற்றும் முயற்சிகள் என்று போய் குற்றம் சாட்டும் போக்கு, அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்று கர்தினால் கிளீமிஸ் அவர்கள், கவலை வெளியிட்டார்.

2014ம் ஆண்டு, பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்துள்ளன என்றும், 2017ம் ஆண்டில் மட்டும், 600க்கும் அதிகமான வன்முறை நிகழ்ச்சிகள் பதிவாகியுள்ளன என்றும், இந்திய ஆயர் பேரவைத்தலைவர், கர்தினால் கிளீமிஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.