2017-12-28 15:35:00

நம்பிக்கை நிறைந்த மியான்மாரை மனக்கண்களால் காண்போம்


டிச.28,2017. அன்பு மற்றும் அமைதியின் திருத்தூதராக மியான்மார் நாட்டுக்கு வருகை தந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் அனைவரையும் அமைதியின் திருப்பயணத்தை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் என்று, மியான்மார் கர்தினால் சார்லஸ் போ அவர்கள், தன் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார்.

2017ம் ஆண்டு மியான்மார் நாட்டுக்கு திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் அந்நாட்டு மக்களுக்குக் கிடைத்த அரியதொரு வரம் என்று தன் செய்தியின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ள கர்தினால் போ அவர்கள், மியான்மார் சமுதாயத்தில் நிலவும் காயங்களைக் குணமாக்கும்படி திருத்தந்தை விடுத்துள்ள அழைப்பை ஏற்பது நம் முதன்மையான கடமை என்று கூறியுள்ளார்.

மனித சமுதாயத்துடன் இறைவன் ஒப்புரவாகும்படி தன் மகனை அனுப்பியுள்ள கிறிஸ்மஸ் காலம், நம்மையும் ஒப்புரவுக்கு அழைக்கிறது என்று, தன் செய்தியில் கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், மியான்மாரில் நிலவி வரும் மோதல்கள், உலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நம்பிக்கையைக் கொணரும் கிறிஸ்மஸ் காலத்தில், நாமும், நம்பிக்கை நிறைந்த மியான்மாரை நம் மனக்கண்களால் கண்டு, அதனை நனவாக்க உழைப்போம் என்ற வேண்டுகோளுடன், கர்தினால் போ அவர்கள், தன் கிறிஸ்மஸ் செய்தியை நிறைவு செய்துள்ளார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.