2017-12-29 15:09:00

2017ல் உலகில் 23 மறைப்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்


டிச.29,2017. 2017ம் ஆண்டில் உலக அளவில், 13 அருள்பணியாளர்கள், ஓர் அருள்சகோதரர், ஓர் அருள்சகோதரி, 8 பொதுநிலை விசுவாசிகள் ஆகியோர் கொலைசெய்யப்பட்டுள்ளனர் என்று, பீதேஸ் செய்தி கூறுகின்றது.

“திருஅவை, மறைசாட்சிகளின் திருஅவையாக இருந்தால் மட்டுமே அது திருஅவை” என்ற தலைப்பில், இந்த விவரங்களை வெளியிட்டுள்ள பீதேஸ் செய்தி, 2017ம் ஆண்டில் கொலை செய்யப்பட்டுள்ள 23 கத்தோலிக்க மேய்ப்புப்பணியாளர்கள் பற்றிய விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து எட்டாவது ஆண்டாக, இவ்வாண்டும், அமெரிக்கக் கண்டத்திலே மேய்ப்புப்பணியாளர்கள் அதிகம் கொலைசெய்யப்பட்டுள்ளனர் என்றும், 2017ம் ஆண்டில், அமெரிக்காவில், 8 அருள்பணியாளர்கள், ஓர் அருள்சகோதரர் மற்றும், 2 பொதுநிலை விசுவாசிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அச்செய்தி கூறுகிறது.

ஆசியாவில் ஓர் அருள்பணியாளர் மற்றும், ஒரு பொதுநிலை விசுவாசியும், ஆப்ரிக்காவில் பத்து மேய்ப்புப்பணியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

2000மாம் ஆண்டு முதல், 2016ம் ஆண்டு வரை, உலக அளவில், ஐந்து ஆயர்கள் உட்பட, 424 மேய்ப்புப்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.