2018-01-03 16:11:00

புலம்பெயர்ந்தோர் பிரச்சனைகளைக் களைவதில் திருப்பீடம் பங்கு


சன.03,2018. புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் குறித்த பிரச்சனைகளைக் களைவதில், உலக நாடுகள் திருப்பீடத்தின் தலைமைத்துவத்தை எதிர்பார்க்கின்றன என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.

51வது உலக அமைதி நாளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய செய்தி குறித்து வத்திக்கான் செய்தி இணையத்திற்குப் பேட்டியளித்த, திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையில், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் அலுவலகத்தின் நேரடிப் பொதுச்செயலர் இயேசு சபை அருள்பணி Michael Czerny அவர்கள் இவ்வாறு கூறினார். 2018ம் ஆண்டில், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் குறித்த பிரச்சனைகளைக் களைவதற்கு எடுக்கப்படும் உலகளாவிய முயற்சிகளில், திருப்பீடம் பெரும்பங்கு ஆற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும், அருள்பணி Czerny அவர்கள் தெரிவித்தார். புலம்பெயர்ந்தோரும் குடிபெயர்ந்தோரும், இன்னல்களை எதிர்நோக்கும் மற்றும் உதவிகள் தேவைப்படும் மக்கள் மட்டும் அல்ல, அவர்கள், அமைதியைக் கட்டியெழுப்புபவர்கள், அமைதிக்கு உதவுகின்றவர்கள் என்றும் அவர் கூறினார். அமைதி அனைவருக்கும், குறிப்பாக, அமைதியின்றி தவிப்பவர்களுக்கு உரியது என்றும், அமைதிக்காக திருத்தந்தை தொடர்ந்து செபிக்கின்றார் என்றும் உரைத்த அருள்பணி Czerny அவர்கள், உலகிலுள்ள 25 கோடி குடிபெயர்ந்தோருள், 2 கோடியே 25 இலட்சம் பேர் புலம்பெயர்ந்தோர் என்றும் தெரிவித்தார்.

ஆதாரம் : Zenit/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.