2018-01-04 15:23:00

அமைதி, நல்லிணக்கம், உடன்பிறப்பு உணர்வுக்கு ஆயர்கள் அழைப்பு


சன.04,2018. இந்தியாவில், புதிய ஆண்டின் ஆரம்பத்தில், சமயச் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது குறித்து, கவலை தெரிவித்துள்ளனர் இந்திய கத்தோலிக்க ஆயர்கள்.

இந்திய ஆயர்கள் சார்பாக, 2018ம் புதிய ஆண்டுக்கு செய்தி வெளியிட்டுள்ள, இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர், ஆயர் தியோடர் மஸ்கரீனஸ் அவர்கள், அமைதி, நல்லிணக்கம், உடன்பிறப்பு உணர்வு ஆகிய இந்தியாவின் பாரம்பரிய விழுமியங்கள் காக்கப்படுமாறு ஆயர்கள் அழைப்பு விடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேசியவாதம் என்ற பெயரில் நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட இயலாதவை என்றும், புதிய ஆண்டின் ஆரம்பத்தில், நாட்டின் பல்வேறு இடங்களில், இந்து தேசியவாதக் குழுக்கள், சிறுபான்மையினர் மற்றும், கத்தோலிக்க நிறுவனங்கள் மீது தாக்குதல்களை நடத்தியிருப்பது ஆயர்களுக்கு கவலையளிக்கின்றது என்றும் அச்செய்தி கூறுகின்றது.

அதேசமயம், நாட்டில் நலமான ஒரு சூழலை உருவாக்குவதற்கு பல அமைச்சர்களும், அதிகாரிகளும் உழைத்து வருவதைப் பாராட்டியுள்ள ஆயர்கள், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்தவர்களின் பாதுகாப்புக்கு உறுதியளித்ததையும் வரவேற்றுள்ளனர்.

இந்தியாவின் 130 கோடி மக்களில், ஏறத்தாழ 2.3 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்கள்.

இந்தியாவில் 2014ம் ஆண்டில் பிஜேபி கட்சி தலைமையிலான அரசு அமைக்கப்பட்டதிலிருந்து, சமயச் சிறுபான்மையினர்க்கெதிரான வன்முறைகளும், அவர்கள் ஓரங்கட்டப்படுதலும் அதிகரித்து வருகின்றன என்று, புள்ளி விவரங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.