2018-01-05 12:10:00

மனித வர்த்தகத்திற்குப் பலியாகுவோரைக் கண்டுபிடிப்பதற்கு...


சன.05,2018. மனித வர்த்தகத்திற்குப் பலியாகும் ஆபத்தை எதிர்நோக்கும் மனிதரைக் கண்டுபிடிப்பதற்கு உதவியாக, விமானத்தில் பணியாற்றும் குழுவினருக்கு பயிற்சிகள் வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனம் முயற்சித்து வருகிறது.

ஐ.நா.வின் மனித உரிமைகள் அலுவலகமும், கானடாவின் Montreal நகரை மையமாகக் கொண்டுள்ள விமான நிறுவனமும் இணைந்து, மனித வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படுவதற்கு அழைத்துச் செல்லப்படும் பயணிகளை இனம் கண்டு, அவர்கள் பற்றி அறிவிப்பதற்கு, விமானப் பணியாளருக்கு பயிற்சி வழிகாட்டிகளைத் தயாரித்து வருகிறது.

இப்பூமியில், சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் நடவடிக்கைகளில், அதிக ஆதாயம் அளிக்கும், ஆயுத மற்றும் போதைப்பொருள் வர்த்தகங்களுக்கு அடுத்த நிலையில், மனித வர்த்தகம் உள்ளது என்று ஐ.நா.கூறியுள்ளது.

2017ம் ஆண்டில், ஏறத்தாழ நான்கு கோடியே மூன்று இலட்சம் பேர், உலக அளவில் கட்டாயத் தொழிலுக்கும், நவீன அடிமைமுறைக்கும் உள்ளாக்கப்பட்டனர் என்று, ஐ.நா.வின் உலக தொழில் நிறுவனமான ILO கணக்கிட்டுள்ளது.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.