2018-01-06 15:52:00

Palidoro சிறார் மருத்துவமனையைப் பார்வையிட்டார் திருத்தந்தை


சன.06,2018. இத்தாலியின் Palidoroவிலுள்ள, குழந்தை இயேசு மருத்துவமனைக்கு இவ்வெள்ளி பிற்பகலில் சென்று, அங்குச் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகள், சிறார் மற்றும் அவர்களின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டில் ஆரம்பித்த வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்களை அவ்வப்போது ஆற்றிவரும் திருத்தந்தை, சனவரி 05, இவ்வெள்ளியன்று, உரோம் நகருக்கு வடமேற்கே ஏறத்தாழ 26 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, கடற்கரை நகரமான Palidoroவிலுள்ள குழந்தை இயேசு சிறார் மருத்துவமனைக்குச் சென்றார்

120 படுக்கை வசதிகளைக் கொண்ட Palidoro குழந்தை இயேசு மருத்துவமனை, உரோம் நகரில் வத்திக்கானுக்கு அருகிலுள்ள குழந்தை இயேசு மருத்துவமனையின் ஒரு கிளையாகும். இம்மருத்துவமனையின் மேலும் இரு கிளைகள், உரோம் புனித பவுல் பசிலிக்காவுக்கு அருகில் ஒன்றும், சாந்தா மரினெல்லாவில் மற்றொன்றும் உள்ளன.

பம்பினோ ஜேசு எனப்படும், உரோம் நகரிலுள்ள குழந்தை இயேசு மருத்துவமனை, ஐரோப்பாவிலே மிகப்பெரிய சிறார் மருத்துவமனையாகும். உரோம் நகருக்கு வெளியேயிருந்து இங்கு சிகிச்சை பெறவரும் குடும்பங்களுக்கு ஒருநாள் இரவு இலவசமாகத் தங்குவதற்கு, இம்மருத்துவமனை உதவி செய்து வருகிறது.

உரோம் குழந்தை இயேசு மருத்துவமனை, ஏறத்தாழ 150 வருட வரலாற்றைக் கொண்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த சிறாரின் நிலைகளைக் கண்ட, பிரபு Scipione Salviati அவர்களும், அவரின் துணைவியாரும் சேர்ந்து 1869ம் ஆண்டில் இம்மருத்துவமனையை ஆரம்பித்தனர். இது, 1924ம் ஆண்டு சனவரி 24ம் தேதி திருப்பீடத்திற்குத் தானம் செய்யப்பட்டது. அன்றிலிருந்து இம்மருத்துவமனை, திருத்தந்தையின் மருத்துவமனை என்று, பொதுவாக அழைக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.