2018-01-10 15:06:00

2,100 வறியோருக்கு, 'சர்க்கஸ் டிக்கட்' அனுப்பிய திருத்தந்தை


சன.10,2018. "எவ்வளவுக்கு அதிகமாக கிறிஸ்துவில் நம்மைப் பதித்துக்கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அதிகமாக, தினசரி சவால்கள் மத்தியிலும், உள்மன அமைதியை கண்டுபிடிக்கிறோம்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில், இப்புதனன்று இடம்பெற்றுள்ளன.

மேலும், சனவரி 11, இவ்வியாழனன்று, உரோம் நகரில் நடைபெறும் ஒரு 'சர்க்கஸ்' விளையாட்டுக் காட்சியைக் கண்டு களிக்க, 2,100 வறியோருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'டிக்கட்' அனுப்பியுள்ளார் என்று, திருத்தந்தையின் தர்மப்பணிகளை ஒருங்கிணைக்கும் பேராயர் Konrad Krajewski அவர்கள் அறிவித்துள்ளார்.

Circus Medrano என்ற நிறுவனத்தினர் நடத்திவரும் இந்த சர்க்கஸ் காட்சியைக் காணும் வறியோருக்கு, இக்காட்சியின் இறுதியில், இரவு உணவும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சவால்கள் நிறைந்த சூழலில், உடல் பயிற்சி, கலைநயம் இவற்றை வெளிப்படுத்தி, சர்க்கஸ் கலைஞர்கள் செய்யும் சாகசங்கள் நமக்கு பெரும் உந்துசக்தியாக அமைகிறது என்று, அண்மையில், திருத்தந்தை வழங்கிய பொது மறைக்கல்வி உரையில் கூறியது, குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.