2018-01-11 15:03:00

இமயமாகும் இளமை : கிராமத்தினரின் நிலையை நாடறியச் செய்த...


தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலைக்கிராமத்தைச் சேர்ந்த சின்னக்கண்ணன், 2017ம் ஆண்டின் இளம் அறிவியலாளர் விருது பெற்றுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், கடந்த டிசம்பர் இறுதி வாரத்தில் நடைபெற்ற இந்திய தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ஏழாம் வகுப்புப் படிக்கும் 12 வயது நிரம்பிய மாணவரான சின்னக்கண்ணன், இவ்விருதுக்கு தான் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை பற்றி இவ்வாறு விளக்குகிறார்..

அந்தியூர் மலைப்பகுதியில் இருந்து அறுபது கி.மீ தூரத்தில் உள்ள கொங்காடை முதலாக பத்து கிராமங்களில் உள்ளவர்கள் சமவெளிப்பகுதிக்குச் செல்ல தனியார் வாகனங்களை நம்பியுள்ளனர். அரசுப் பேருந்து வசதி இல்லாததால் ஒருமுறை மலையில் இருந்து, கீழே சென்று வீடு திரும்ப, ஒரு நபர் நூறு ரூபாய்  செலுத்தவேண்டியுள்ளது. என் அம்மா ரங்கம்மா, அப்பா மாதன் ஆகிய இருவரும் விவசாயத் தொழிலாளர்கள். வேலை கிடைத்தால் ஒரு நாளைக்கு 150 ரூபாய் கிடைக்கும். எங்கள் ஊரில் எல்லாருக்கும் கூலி வேலைதான். ஒரு வாரத்தில் எனது கிராமத்தின் 1,940 மக்கள், தனியார் வண்டிகளில் அதிகக் கட்டணம் செலுத்தி பயணம் செய்வதையும், இதனால் போக்குவரத்து செலவு மற்றும் பயணிப்பவர்களின் நேர விரயம், அதிக கட்டணம் செலுத்தமுடியாததால் வேலைக்குப் போகாத மக்கள் இழக்கும் வருமானம் ஆகியவற்றையும் கணக்கிட்டேன். இதில், ஓர் ஆண்டுக்கு ஒரு கோடியே நான்கு இலட்சத்து அறுபத்து நாலாயிரம் ரூபாயை மக்கள் செலவு செய்யவேண்டியுள்ளது என்பதைக் கண்டறிந்தேன். எனவே, கிராமத்தினரின் இந்நிலை குறித்து  மூன்று மாத காலம் நடத்திய ஆய்வில், நண்பர்கள் கார்த்தி, ராஜ்குமார் மற்றும் நாகராஜ் ஆகியோர், எனக்கு மிகவும் உதவினர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் அவர்களிடம், எனது கிராமத்திற்கு அரசுப்பேருந்து கேட்டு மனு அளித்துள்ளேன்.

ஆம்.மனது வைத்தால் எதையும் சாதிப்பவர்கள் நம் இளையோர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.