2018-01-11 15:42:00

துன்புறுவோரோடு சேர்ந்து துன்புறத் தவறினால்...


சன.11,2018. “பல்வேறு மதங்கள், மொழிகள், அல்லது கலாச்சாரங்களைச் சார்ந்தவர்களாய் இருந்தாலும்கூட, துன்புறும் மக்கள் அனைவரோடும் சேர்ந்து நாம் துன்புறத் தவறினால், நம்முடைய மனிதாபிமானம் பற்றி கேள்வி எழுப்புவது அவசியம்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இவ்வியாழனன்று வெளியாயின.

ஒவ்வொரு நாளும் ஒன்பது மொழிகளில், @Pontifex என்ற முகவரியில், டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மதம், மொழி, இனம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து, துன்புறும் அனைத்து மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், IFAD எனப்படும், ஐ.நா.வின் உலக வேளாண் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் Gilbert F. Houngbo, உரோம் இவாஞ்சலிக்கல் லூத்தரன் கிறிஸ்தவ சபை சமூகத்தின் மேய்ப்பர், Jens-Martin Kruse, அவரின் குடும்பத்தினர் ஆகியோரை, இவ்வியாழனன்று, வத்திக்கானில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

இன்னும், திருத்தந்தையை வரவேற்கக் காத்திருக்கும், சிலே நாட்டின் Mapuche கத்தோலிக்கர், தங்களின் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வை அல்ல, மாறாக, இறையாசீரையே திருத்தந்தையிடமிருந்து எதிர்பார்க்கின்றனர் என்று, Mapuche பகுதியின் மேய்ப்புப்பணிக்குப் பொறுப்பான Isolde Reuque Paillalef அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தந்தை, சிலே நாட்டு அரசுத்தலைவரோ அல்லது சிறப்பு அதிகாரம் கொண்ட அமைச்சரோ அல்ல, மாறாக, திருத்தந்தை ஒரு மேய்ப்பர் என்று, பீதேஸ் செய்தியிடம் கூறினார், Paillalef.  

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.