2018-01-11 15:49:00

பிரான்சிஸ், உலகில் அனைவருக்கும் திருத்தந்தை


சன.11,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்று, ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ளவேளை, எங்களின் உடன்பிறப்பில் ஒருவர், திருத்தந்தையாகப் பணியாற்றிவருவது, எங்களுக்குக் கிடைத்த பெரும் பேறு என்று, அர்ஜென்டீனா நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

இவ்வுலகில், கிறிஸ்தவர்களுக்கு, கிறிஸ்துவின் பிரதிநிதியாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், அனைத்து நாடுகளிலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குக் கிடைத்துவரும் ஆதரவு பெருகி வருகின்றது என்றும், உலகின் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் மற்றும், நன்மனம் கொண்ட மனிதர்கள், திருத்தந்தையை, எடுத்துக்காட்டாகப் பேசி வருகின்றனர் என்றும், அர்ஜென்டீனா ஆயர் பேரவையின் உயர்மட்ட குழு கூறியுள்ளது.

அர்ஜென்டீனாவில், பெருமளவான சமூகத் தொடர்பு ஊடகங்கள், திருத்தந்தையை, சில அரசியல் அல்லது சமூக நபர்களோடு ஒப்பிட்டுப் பேசுகின்றன என்றும், சில ஊடகங்கள், திருத்தந்தை அல்லது திருஅவை பற்றி பேசுவதில்லை என்றும், இப்புதனன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ள அக்குழு, இத்தகைய ஊடகங்கள், மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்குகின்றன என, சந்தேகமின்றி சொல்லலாம் என்றும் கூறியுள்ளது.

மேலும், இந்த ஊடகங்கள், திருத்தந்தை மற்றும் அவரின் சொற்களைத் திரித்துக்கூறி, அவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றன என்றும், அக்குழு கவலை தெரிவித்துள்ளது. 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, கொடுக்கப்பட வேண்டிய மற்றும் அவர் பெறுவதற்கு தகுதியுள்ள மரியாதை வழங்கப்படும், இதற்கு Luján அன்னை மரியா உதவுவார் என்று, நம்பிக்கை தெரிவித்துள்ளது, அர்ஜென்டீனா ஆயர் பேரவையின் உயர்மட்ட குழு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.