2018-02-01 14:36:00

கருக்கலைப்பை எதிர்க்க அயர்லாந்து கத்தோலிக்கருக்கு அழைப்பு


பிப்.01,2018. மனித உயிர், பிறப்பு முதல் இறப்பு முடிய மதிப்புள்ளது என்பதை சாதாரண மனித அறிவும், மத நம்பிக்கையும் நமக்குச் சொல்லித் தருகின்றன என்று, அயர்லாந்தின் முதுபெரும் தந்தை பேராயர் ஈமோன் மார்ட்டின் அவர்கள் ஒரு மடலில் விண்ணப்பித்துள்ளார்.

கருவைக் கலைக்கும் உரிமை வழங்குவது குறித்து, அயர்லாந்து நாடாளுமன்றம் தன் விவாதங்களை மே மாதம் மேற்கொள்ளும் என்று, சனவரி 29 இத்திங்களன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையைத் தொடர்ந்து, அந்நாட்டு ஆயர் பேரவை தன் கண்டனத்தைத் தெரிவித்து வருகிறது.

இச்சூழலில், 'மனித வாழ்வுக்குப் பணியாற்றுவது, இறைவனுக்கு ஆற்றும் பணி' என்ற தலைப்பில், புதிய ஆண்டுக்கென, பேராயர் மார்ட்டின் அவர்கள் வெளியிட்டுள்ள மேய்ப்புப்பணி மடலில், உயிர்களை மதிக்கும் வழிமுறைகளை நமது குழந்தைகளுக்குக் கற்றுத்தருவது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

1967ம் ஆண்டு பிரித்தானியாவில் கருக்கலைப்பு சட்டமான பிறகு, ஐந்தில் ஒரு பெண் கருக்கலைப்பை செய்துகொள்கிறார் என்று குறிப்பிட்ட பேராயர் மார்ட்டின் அவர்கள், ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போல், அயர்லாந்தும் கருக்கலைப்பு பேரரசாக மாறவேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

கருக்கலைப்பை தடை செய்யும்வண்ணம் அயர்லாந்தில் நிலவிய சட்டத்தை நீக்க வேண்டுமா என்ற கேள்வி 1983ம் ஆண்டு எழுந்தபோது, மக்களில் 67 விழுக்காட்டினர் வேண்டாம் என்று வாக்களித்தனர் என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.