பிப்.13,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சேர்ந்து செபமாலை செபிப்பது, பிப்ரவரி 18, வருகிற ஞாயிறிலிருந்து, வத்திக்கான் வானொலியில் ஒவ்வொரு நாளும் ஒலிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொல்லும் செபமாலை பக்திமுயற்சியை, வத்திக்கான் வானொலி ஒலிபரப்பும் என்று, வத்திக்கான் சமூகத்தொடர்புத்துறை அறிவித்துள்ளது.
மேலும், திருநீற்றுப் புதனாகிய, பிப்ரவரி 14, இப்புதன்கிழமையிலிருந்து, உரோம் Rebibbia, சிறைச்சாலையின் 12 கைதிகள் வழங்கும் ‘நற்செய்திக்கு உள்ளே’ என்ற நிகழ்ச்சி, வத்திக்கான் வானொலியில் ஒலிபரப்பாக உள்ளது.
தவக்கால திருப்பலி வாசகங்களை மையப்படுத்தி கைதிகள் வழங்கும் சிந்தனைகள், திங்கள் முதல் சனிக்கிழமை வரை, மதியம் 1.25, மாலை 4.40, 6.25 ஆகிய நேரங்களிலும், கைதிகளின் வாழ்வு பற்றிய சிந்தனைகள், மாலை 4.40க்கும் ஒலிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிப்ரவரி 14, இப்புதன் மாலை 4.30 மணிக்கு உரோம் புனித ஆன்செல்ம் ஆலயத்தில் தவப்பவனியை தலைமையேற்றும் நடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித சபினா பசிலிக்காவில், இப்புதன் மாலை 5 மணிக்கு, திருநீற்றுப் புதன் திருப்பலியை நிறைவேற்றுவார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |