2018-02-14 16:31:00

'உலகளாவிய குடும்பம்' என்ற உணர்வு வளரவேண்டும்


பிப்.14,2018. உலகமெங்கும் பரவியுள்ள புலம்பெயர்ந்தோர் பிரச்சனைக்குத் தகுந்த தீர்வுகள் காண்பதற்கு, 'உலகளாவிய குடும்பம்' என்ற உணர்வு, நம்மிடையே வளரவேண்டும் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவையின் பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றினார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும், பேராயர் Ivan Jurkovič அவர்கள், புலம்பெயர்ந்தோரை மையப்படுத்தி, பிப்ரவரி 13, இச்செவ்வாயன்று நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு பேசினார்.

சதுரங்க விளையாட்டில், எளிதில் தூக்கியெறியப்படும் காவல் வீரர்களைப்போல், உலக சமுதாயம், புலம்பெயர்ந்தோரை நடத்துகின்றது என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டிய பேராயர் Jurkovič அவர்கள், புலம்பெயர்ந்தோரின் அடிப்படை உரிமைகளைக் காப்பது என்ற முயற்சியே, அனைத்து மனிதாபிமான முயற்சிகளுக்கும் அடித்தளமாக அமைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

பல நாடுகளில், பெரும் பிரச்சனைகள் மத்தியில், வாழும் எளிய மக்கள், தங்கள் நாட்டிற்குள் அடைக்கலம் தேடிவருவோருக்குத் தரும் ஆதரவு, உலக சமுதாயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையவேண்டும் என்று பேராயர் Jurkovič அவர்கள், தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.