2018-02-21 15:20:00

வருகிற ஞாயிறு, திருத்தந்தையின் மேய்ப்புப்பணி பயணம்


பிப்.21,2018. பிப்ரவரி 25 வருகிற ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரின் போந்தே மம்மோலோ (Ponte Mammolo) பகுதியில் அமைந்துள்ள திருத்தந்தை புனித முதலாம் ஜெலாசியோ (St Gelasio) பங்குத் தளத்தில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வார் என்று, உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

ஞாயிறு மாலை 4 மணியளவில் துவங்கும் இந்த பயணத்தில், திருத்தந்தை, அப்பங்கில், மறைக்கல்வி பயின்றுவரும் குழந்தைகளை முதலில் சந்தித்தபின், இளையோர், நோயுற்றோர், குடும்பத்தினர் மற்றும் பிறரன்புப் பணியில் ஈடுபட்டிருப்போர் ஆகியோரை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 6 மணியளவில், பங்கு கோவிலில் ஒப்புரவு அருளடையாளத்தை ஒரு சிலருக்கு வழங்கும் திருத்தந்தை, அதன் பின், பங்குக்கோவிலில் திருப்பலி நிறைவேற்றுவார்.

1972ம் ஆண்டு நிறுவப்பட்ட புனித முதலாம் ஜெலாசியோ பங்கில், 250க்கும் மேற்பட்ட வறியோருக்கு ஒவ்வொரு வாரமும் உணவு வழங்கப்படுகிறது என்றும், 50க்கும் மேற்பட்ட வீடற்றோருக்கு பங்கில் உள்ள உணவகம் காலை உணவு வழங்கிவருகிறது என்றும் பங்கு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.