2018-02-28 16:17:00

C9 கர்தினால்கள் ஆலோசனைக் குழுவின் சந்திப்பு குறித்து...


பிப்.28,2018. பிப்ரவரி 26, இத்திங்கள் முதல், 28, புதன் வரை C9 என்றழைக்கப்படும் கர்தினால்களின் ஆலோசனைக் குழு மேற்கொண்ட சந்திப்பைக் குறித்து, வத்திக்கான் செய்தித் தொடர்புத்துறைத் தலைவர், Greg Burke அவர்கள், செய்தியாளர்களிடம் விவரங்கள் வழங்கினார்.

ஒவ்வொருநாளும் காலை 9 மணி முதல், 12.30 மணி வரையிலும், பிற்பகல் 4.30 முதல், 7 மணி வரையிலும் இக்குழுவின் அமர்வுகள் நடைபெற்றன என்றும், இந்த அமர்வுகள் அனைத்திலும் கலந்துகொண்ட திருத்தந்தை,  மறைக்கல்வி உரை காரணமாக, புதன் காலை அமர்வில் மட்டும் கலந்துகொள்ளவில்லை என்றும் Burke அவர்கள் தெரிவித்தார்.

ஒவ்வோர் நாட்டிலும் செயல்பட்டுவரும் ஆயர் பேரவைகள், திருப்பீடத்தின் செலவுகளைக் கண்காணித்தல், மற்றும், பாலியல் கொடுமைகளிலிருந்து சிறாரைப் பாதுகாத்தல் ஆகியவை, இச்சந்திப்புக்களில் பேசப்பட்ட முக்கியக் கருத்துக்கள் என்று, Burke அவர்கள் கூறினார்.

திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்குவதற்கென உருவாக்கப்பட்டுள்ள C9 கர்தினால்கள் குழு, ஏப்ரல் மாதம் 23,24,25 ஆகிய தேதிகளில் அடுத்த சந்திப்பை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.