மார்ச்,01,2018. கிறிஸ்தவ மீட்பைக் குறித்து அவ்வப்போது எழும் பல கேள்விகளுக்கு பதில் தரும் வகையில், திருப்பீடத்தின் விசுவாசக் கோட்பாட்டு பேராயம், மடல் ஒன்றை உருவாக்கி, உலகெங்கும் உள்ள ஆயர்களுக்கும், விசுவாசிகளுக்கும், இவ்வியாழனன்று அனுப்பியுள்ளது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கிறிஸ்தவ மீட்பின் குறிப்பிட்ட சில அம்சங்களை விளக்கும் வகையில், திருப்பீடத்தின் விசுவாசக் கோட்பாட்டு பேராயம் Placuit Deo என்ற பெயரில் உருவாக்கியுள்ள ஒரு மடலை, இப்பேராயத்தின் தலைவர், பேராயர் Luis Francisco Ladaria அவர்கள், செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்ட வேளையில் இவ்வாறு கூறினார்.
திருப்பீடத்தின் விசுவாசக் கோட்பாட்டு பேராயம், இவ்வாண்டு, சனவரி 23ம் தேதி முதல் 26ம் தேதி முடிய மேற்கொண்ட ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்களின் இறுதியில் உருவாக்கப்பட்ட இம்மடலை வெளியிடுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார் என்று, பேராயர் Ladaria அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆறு பகுதிகளைக் கொண்ட இம்மடலின் முதல் நான்கு பகுதிகளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மையப்படுத்தி, பேராயர் Ladaria அவர்களும், இறுதி இரு பகுதிகளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மையப்படுத்தி, இப்பேராயத்தின் செயலர், பேராயர் Giacomo Morandi அவர்களும், செய்தியாளர்கள் கூட்டத்தில் உரையாற்றினர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
சமூக வலைத்தளங்கள்: