2018-03-01 15:05:00

கிறிஸ்தவ மீட்பின் குறிப்பிட்ட சில அம்சங்களை விளக்கும் மடல்


மார்ச்,01,2018. கிறிஸ்தவ மீட்பின் குறிப்பிட்ட சில அம்சங்களை விளக்கும் வகையில், திருப்பீடத்தின் விசுவாசக் கோட்பாட்டு பேராயம் Placuit Deo என்ற பெயரில் உருவாக்கியுள்ள ஒரு மடல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒப்புதலோடு, மார்ச் 1, இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.

திருத்தூதர் பவுல், எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில், "அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம்" (எபேசியர் 1:9) என்று கூறியுள்ள சொற்களுடன் துவங்கும் இந்த மடலில், ஆறு பிரிவுகள் உள்ளன.

முன்னுரையுடன் துவங்கும் இம்மடல், கிறிஸ்தவ மீட்பின் பொருளில் இன்றைய கலாச்சார மாற்றங்களால் உருவாகும் விளைவுகள்; மீட்பிற்காக மனித ஆவல்; மீட்பரும், மீட்புமான கிறிஸ்து; கிறிஸ்துவின் உடலான திருஅவையில் மீட்பு, என்ற நான்கு பகுதிகளையும், மீட்பரை எதிர்பார்த்து, நம்பிக்கையைப் பகிர்தல் என்ற கருத்தை முடிவுரையாகவும் கொண்டுள்ளது.

தனிப்பட்டவர்களின் சுதந்திரம், மற்றும் சக்தியை மிக அதிகமாக வலியுறுத்தி வரும் இன்றைய உலகில், ஒருவர் தன் சொந்த சக்தியால் மீட்படைய முடியும் என்ற தவறான எண்ணங்களும் பரவி வருகின்றன என்று, இம்மடலின் துவக்கத்தில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கத்தோலிக்கத் திருஅவை வரலாற்றில் எழுந்த தவறான படிப்பினைகளான Pelagianism மற்றும் Gnosticism ஆகியவற்றின் புதிய வடிவங்கள் இன்றைய உலகில் நிலவுகின்றன என்பதையும் இம்மடல் சுட்டிக்காட்டி, தவறான இந்தப் படிப்பினைகளை எவ்விதம் எதிர்கொள்வது என்பதையும் விளக்கியுள்ளது.

மனிதர்களின் மீட்பு, அனைத்து தீய சக்திகளையும், அவற்றின் இறுதி வடிவான மரணத்தையும் (காண். 1 கொரி. 15:26) வெல்வதில் அடங்கியுள்ளது என்று கூறும் இம்மடல், உடலும், ஆன்மாவும் முழுமையான மீட்படைவதற்கு, இறைவன் மனித சமுதாயம் அனைத்தையும் அழைத்துள்ளார் என்ற கருத்தை இறுதிப் பகுதியில் வழங்கியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.