2018-03-03 09:59:00

Diez cosas நூலுக்கு திருத்தந்தை முன்னுரை


மார்ச்,02,2018. ஒவ்வொரு மனிதர்மீதும், கனிவுடனும், பாசத்துடனும் அன்புசெலுத்துகின்ற அன்னையாக வாழ்வதற்கு, உலகளாவியத் திருஅவை அழைப்புப் பெற்றுள்ளது என்றும், திருஅவையின் எல்லா உறுப்பினர்களும், இந்த முக்கியமான அழைப்பை உணர்ந்து நடக்குமாறும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு நூல் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

Diez cosas அதாவது பத்து கருத்துக்கள் என்ற நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளதோடு, அந்த நூலின் ஆசிரியர் María Teresa Compte Grau அவர்களுக்கு, பாராட்டு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நூலில் பெண்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் குறித்த, தன் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நூலை வாசிப்பவர்கள், இதில் வலியுறுத்தப்பட்டுள்ள பத்து கருத்துக்களால் பயன் பெறுவார்கள் என்றும், உலகில், பெண்களின் அழைப்பு மற்றும் பணியைப் புரிந்துகொண்டு செயல்படும் நடவடிக்கைகள் வளருவதற்கு, நம் ஆண்டவர் உதவுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை.

இந்நூலில், அன்னை மரியா பற்றியும் மறக்காமல் குறிப்பிட்டுள்ளதற்கு, தன் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ள திருத்தந்தை, ஆணாதிக்க உணர்வு, மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட மேலோங்கி நிற்கின்றது என்ற கவலையையும் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை, மனித வர்த்தகத்தில் பெண்கள் பயன்படுத்தப்படல், நுகர்வுத் தொழிற்சாலைகளிலும், கேளிக்கைகளிலும், விளம்பரங்களிலும் பெண்கள் பயன்படுத்தப்படுவது போன்றவைகளைச் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, திருஅவையின் பணிகளில் பெண்களின் நிலை, கவலை தருகின்றது என்றும் கூறியுள்ளார்.

“திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெண்களுக்குப் பரிந்துரைக்கும் பத்து கருத்துக்கள்  (Diez cosas que el papa Francisco propone a las mujeres) ” என்ற தலைப்பைக் கொண்ட இந்நூல், மார்ச் 07, வருகிற புதன்கிழமையன்று மத்ரித் நகரில் வெளியிடப்படும். 85 பக்கங்கள் கொண்ட இந்நூலை, María Teresa Compte Grau என்பவர் எழுதியுள்ளார். கிளேரிசியன் சபை பதிப்பகம் இந்நூலை வெளியிடுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.