2018-03-03 10:31:00

சீனாவின் TaiYuan உயர்மறைமாவட்டத்தில் இளையோர் ஆண்டு


மார்ச்,02,2018. இளையோரை மையப்படுத்தி, வருகிற அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தயாரிப்பாக, சீனாவின் TaiYuan உயர்மறைமாவட்டம், இளையோர் ஆண்டை ஆரம்பித்து சிறப்பித்து வருகிறது.

சீனாவின் வடபகுதியிலுள்ள Shanxi மாநிலத்தின் TaiYuan உயர்மறைமாவட்டத்தில் இடம்பெற்ற, இந்த இளையோர் ஆண்டின் தொடக்க நிகழ்வில், இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட இளம் கத்தோலிக்கர் கலந்துகொண்டு, தங்கள் விசுவாசத்தை அறிக்கையிட்டனர் என்று, பீதேஸ் செய்தி கூறுகின்றது.

கப்புச்சின் சபை புனிதரான Gregory Maria Grassi, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால், புனித அன்னை தெரேசா ஆகியோரின் படங்கள், இந்நிகழ்வில் இடம்பெற்ற பவனியில் எடுத்துச்செல்லப்பட்டன.

பிப்ரவரி 21ம் தேதி, ஆயர் Paolo Meng Ning You அவர்கள், திருப்பலியை தலைமையேற்று  நிறைவேற்றி, இந்த இளையோர் ஆண்டை ஆரம்பித்து வைத்தார். இத்திருப்பலியில், 60 அருள்பணியாளர்கள், 28 அருள்சகோதரிகள், 24 குருத்துவமாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்  என்று, பீதேஸ் செய்தி கூறுகின்றது.

“இறைவனைத் தேடுதல், உலகளாவியத் திருஅவையோடு இணைந்து நடத்தல்” என்ற தலைப்பில், ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த இளையோர் ஆண்டு, வருகிற நவம்பர் 25ம் தேதி நிறைவடையும். 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.