2018-03-05 15:27:00

இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவையின் நிறையமர்வு கூட்டம்


மார்ச்,05,2018. "இலத்தீன் அமெரிக்க தலத்திரு அவையையும், சமுதாயத்தையும் கட்டியெழுப்பும் தூணாக விளங்குவோர் பெண்கள்" என்ற மையக்கருத்துடன், மார்ச் 6ம் தேதி, இச்செவ்வாய் முதல், 9, வருகிற வெள்ளி முடிய இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவை, வத்திக்கானில் ஆண்டு நிறையமர்வு கூட்டத்தை நடத்துகிறது.

இந்த கூட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள கருத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலத்தீன் அமெரிக்க ஆயர்களுக்கு போகோட்டோவில் வழங்கிய உரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் கர்தினால்கள், ஆயர்கள் ஆகியோருடன், ஒரு சில பெண்களும் கலந்துகொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தின் இறுதி நாளான மார்ச் 9ம் தேதி காலையில், இக்குழுவினர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்திப்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 8ம் தேதி அனைத்துலகப் பெண்கள் நாள் சிறப்பிக்கப்படுவதையடுத்து, இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவை, வத்திக்கானில் பணியாற்றும் 40 பெண்களுக்கு சிறப்பு விருந்தொன்றை ஏற்பாடு செய்துள்ளது என்றும், இத்திருப்பீட அவை அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.